Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Friday, June 17, 2011

ஆன்மீகம்

ஆன்மீகம்

எந்த ஒரு பொய்யான கொள்கைகளும், தகவல்களும் நூறாண்டுகளாக, ஆயிரமாண்டுகளாக, ஆயிரமாயிரமாண்டுகளாக பின்பற்றபட்டோ, தொடர்ந்து கொண்டிருக்கவோ மாட்டாது, ஹிட்லரின் யூத எதிர்ப்புக்கொள்கை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மட்டுப்பட்டது போல, கடாபியின் இராணுவக் கொள்கை சர்வதேசத்தால் கிழித்தெறியபட்டுகொண்டிருபது போல, ஏன் அண்மையில் ஊழல் சாம்ராஜ்யத்தின் கோட்டை தமிழர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கமுடியாத அதிகாரத்தில் இருந்த கோழை கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது போல, இன்னும் அருகாமையில் சொல்வதென்றால் எமது தேசத்தின் கோவின் மகுடம் பல அம்புகளினால் குறிபார்க்கபட்டுகொண்டிருப்பது போல, எந்த ஒரு பிழையான கொள்கைகளும் நீண்ட காலதிட்கு சமூகத்தினால் ஏற்றுகொள்ளவும், பின்பற்றிகொண்டிருக்கவும் மாட்டாது, அவ்வாறு காலதி காலமாக பின்பற்றபட்டுகொண்டிருப்பது என்றும் பிழையானதாகவோ, பொய்மையாகவோ இருக்காதென்பதே எனது வாதத்தின் தொனிப்பொருள்.

இலங்கையில் அண்மைகாலமாக எம்மவர்களின் இளஞ்சமுதாயத்தினர் மத்தியில் ஆன்மிகத்தை பற்றியும், கடவுட் கொள்கைகள் பற்றியும் ஒரு தெளிவின்மை இருந்து கொண்டேயிருகின்றது (
மற்றயவர்கள் ஆன்மீகத்தில் காட்டும் நாட்டம் வியக்கவைக்கிறது, இன்னும் ஒரு படி மேலே போய் எமது ஆலயங்களில் எம்மைவிட அவர்களே கூட இருக்கிறார்கள், வருகிறார்கள், ஆம் யாருமற்ற இடங்களை அரசாங்கம் பட்டா போடுவது இயற்கை தானே, என்னை மிகவும் பாதித்த இன்னுமொன்று யாழ் நல்லூர் பிரசித்தி வாய்ந்த கோவிலில் அவர்களே அதிகளவில் திரிகிறார்கள், கலாசாரமற்ற உடைகளிலும் அங்கு உலாவுகிறார்கள், தகுந்த உடட்சுத்தமுடந்தான் வருகிறார்கள் என்றால் அதுவும் கேள்விக்குறிதான், ஏன் அங்கு வாயில் காப்பாளர்களே இரு சி சிப்பாய்கள் தான், இவற்றிட்கெல்லாம் காலமும், நடந்தேறிய விடயங்களும்  தான் காரணம் என்றாலும், எம்மவர்கள் மத்தியில் தொன்று தொட்டு இருந்து வந்த வழிபாடுகள், கலாசாரங்கள் பிறழ்ந்து விட்டன என்பதும் கசப்பான ஒரு உண்மையே) அதுவும் அண்மைக் காலங்களாக மேடையேற்றபடும் பல ஆனந்தாக்களின் ஆனந்ததாண்டவங்களும் இவர்கள் மனதை மேலும் குழப்பியிருக்க வேண்டும், ஆனால் குழப்பிய குட்டையில் தான் இலகுவாக மீன் பிடிக்க முடியும் நண்பர்களே  ஆகவே தூண்டில்களுடன் காத்திருக்கும் கடவுள் எதிர்ப்பாளர்களை இனம் கண்டுகொள்ளுங்கள்.

பல விடயங்களை நம்பிக்கை என்ற உதவியுடன் தான் கடக்க வேண்டியுள்ளது, நாளை விடியும் என்பதும் நம்பிக்கை, பிராண வாயு தொடர்ந்து கிடைக்கும் (
அதுவும் இலவசமாக , இதற்கும் கட்டணம் என்றால் ???) என்பதும் நம்பிக்கை, காய்கறிகள் விளையும் என்பதும் நம்பிக்கை, மழை பொழியும் என்பதும் நம்பிக்கை ஏன் வாழ்கையில் ஒவ்வொரு செயட்பாடுகளையும் உற்று நோக்கினீர்களாயின் நம்பிகையுடன் நாம் எவ்வாறு பின்னிப் போயுள்ளோம் என்று தெரிய வரும், அதே போல்தான் ஆன்மிகம், கடவுட்கொள்கை, ஆத்திகம் இவையும் ஒரு வகை நம்பிக்கை, இந்த அண்ட சராசரங்களையும், உலகத்தையும், அதிலுள்ள உயிர்களையும் படைத்திட்ட, ஆட்டிவைக்கின்ற அந்த பெயரற்ற, ஊரற்ற, குணம், குறியற்ற, கண்ணால் காணமுடியாத சக்தியை நாம் இறை என்கிறோம் அதை வழிபடுகிறோம்.

அதற்கு ஒரு உருவம் கொடுக்க விரும்பி சிலை, உருவ வழிபாடுகளை தோற்றுவித்தோம், இவற்றினை எம் வாழ்கையில் ஒரு அங்கமாக கருதி விழாக்கள், பண்டிகைகள், பூஜைகள், அபிசேகங்களை உருவாக்கி செய்தும் வந்தோம், இதனை உணர்ந்து அறிவுபூர்வமாக பின்பற்றியவர்கள் இதன் பயன்களால் கவரப்பெற மீண்டும் மீண்டும் எம்மிடம் வந்தார்கள் நாம் வளர்ந்தோம், எங்கும், எதிலும் இருக்கும் எதிர் மறை எண்ணம் கொண்டவர்கள் இவற்றினை சரியாக அறிந்து கொள்ளமுடியாதவர்கள் எம்மைவிட்டு பிரிந்து தமக்கு நாத்திகன் என்று பெயர் சூடிக்கொண்டார்கள்.


ஆனால் இவர்கள் தம்மை பகுத்தறிவாளன் என்ற பதம் பிரயோகித்து தர்க்கம் புரிய விளையும் போது தான் பல விடயங்களை ஆராய வேண்டிய நிலை வருகிறது, உண்மை என்னவென்றால் இவர்களில் பல பேருக்கு பகுத்தறிவாளன் என்றால் என்ன என்பதன் அர்த்தம் தெரியாது, கட்சி கொடி ஏற்றினால் தேசிய கொடி என்று திரியும் கூட்டம், உண்மையான பகுத்து அறிபவன் இந்த உலகத்தின் கர்த்தா யார், மூலம் எது என்ற தேடலில் இன்னும் இருக்கிறானே ஒழிய கடவுள் எதிர்ப்பு கோஷ்டியினரில் இருக்க மாட்டான் என்று என்னால் ஆணித்தரமாக கூறமுடியும்.


இந்த உலகத்தில் எத்தனை வீதமான வன்செயல்கள், மதம், நெறி, சமயம் என்ற கட்டுகோப்புகளில் இருக்கும் உண்மையான ஆன்மிக வாதியினால் நிகழ்த்தபடுவதில்லை, இந்த முறைமைகள், சமயங்கள் என்ற ஒன்று இல்லாவிட்டால் அதன் விளைவுகளை யோசித்து பாருங்கள், அரசாங்கத்தினால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு சிப்பாயினை நிறுத்தமுடியுமா?, உலகின் 90 வீதம் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள், அந்த 10 வீதமே  இந்த வன்செயல்களுக்கு காரணம் என்று கூறவரவில்லை, ஆனால் இரு பக்கங்களும் இருக்கும் ஒரு சில கறுப்பாடுகள் இவற்றினை தூண்டிவிட்டு வேடிக்கை பார்கின்றன, உதாரணமாக சிறந்த முகாமைத்துவ கொள்கையினை ( Good Corporate Governance ) பின்பற்றிக்கொண்டிருக்கும் பல பில்லியன் ரூபாய் வணிகங்களில் ஊழல் ( Fraud ) நடப்பதில்லையா அதற்கு அந்த கொள்கைகளையா குறை கூறிக்கொண்டிருக்கிறோம் அல்லவே, அவை சரியான முறையில் பிரயோகிக்கபடாமயினாலும், பின்பற்றபடாமையினாலுமே  குற்றங்கள், தவறுகள் நடந்து கொண்டிருகின்றன, அதே போல்தான் ஆத்திகம் என்னும் பயிர்களுடன் ஒரு சில நாசகார களைகளும் வளருகின்றது, எமது இலக்கு களையாக  இருக்கவேண்டுமேயொழிய நிச்சயம் பயிர்கள் அல்ல.

எமது ஆரம்ப நிலைக் கல்விகளில் கற்றிருப்போம் வரைபடங்கள், உருவகங்கள் மூலம் கடினமான பாட விடயங்களும் இலகுவாக மனதில் பதிந்து விடும் என்று, அதே போல்தான் ஆலயங்கள் எனும் வரைபடத்திலுள்ள சிலை வழிபாடு எனும் உருவகங்கள், இவை மக்களை சரியான பாதையில் வழி நடத்தி செல்வதற்கும், சரியான ஆன்மிக நெறியினை போதிப்பதற்கும் சிறந்த, உண்மையான ஆன்மிக கல்லூரிகளில் பட்டம் பெற்ற போலியற்ற ஆசிரியர்களால் ஆன்மிக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பாட நெறி.


அண்மையில் ஒரு பதிவு வாசிக்க நேர்ந்தது எனது அபிமானம் மிக்க அண்ணா ஒராள் எழுதியிருந்தார், ஆலயங்களில் தொழில் புரியும் நபர்களின் வேலை அல்லது வெளியீடு நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு (GDP ) பங்களிபதில்லை என்று, அவர் எந்த அர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை ஆனால் எனது கருத்து இவை மறைமுகமாக நிச்சயமாக நாட்டு மக்களுக்கும் இறுதியில் நாட்டிற்கும் பங்களிக்கும் என்று, உதாரணமாக வீடுகளில் வேலை செய்யும் இல்லத்தரசிகளின் சேவைகளும் கூட G .D .P இற்கு பங்களிபதில்லை, ஆனால் அவர்கள் தங்கள் கடமைகளை சரிவரச் செய்யும்  பட்சத்தில் இல்லத்தலைவனால் சிரமமின்றி தனது கவனத்தை தொழில் மேல் வைத்து தன்னுடைய பங்களிப்பை நாட்டிற்கு வினைத்திறனான வகையில் செய்ய முடியும், அதேபோல் அங்கு வளரும் இளம் சமுதாயம் குழப்பங்கள், சிரமங்கள் இன்றி சிறந்த முறையில் பள்ளி, கல்லூரி படிப்புக்களை முடித்து தாங்களும் தங்களுடைய பங்களிப்பை நாட்டிற்கு வழங்குவார்கள், இவற்றிட்கெல்லாம் மறைமுக பங்களிப்பு இல்லத்தரசிகள் தான் என்றால் மறுக்க முடியாதல்லவா, அதே போல்தான் ஆலயங்களில் தொழில் புரியும் வர்கத்தினரும்.


ஆகவே நண்பர்களே எந்த பொய்யும், பிழையான வாதங்களும் காலம் கடந்து தொடர்வதில்லை என்ற எனது முதற் பந்தி வாதத்தின் அடிப்படையில் ஆன்மிகம் நூற்றிற்கு நூறு உண்மையானதே, இந்த குளத்தில் நீங்களும் வந்து ஆராய்ச்சி செய்யுங்கள், எமது நன்மைகளில் கலந்து கொள்ளுங்கள், தூரே நின்று குப்பைகளை வீசாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு இன்னும் எழுத நிறைய உண்டு எனினும் கிடைக்கும் பின்னூட்டல்களின் அடிப்படையில் தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன்.


 டிஸ்கி ( Disclaimer) :- இவை ஆன்மிகத்தை பற்றி தெளிவில்லாத மன நிலையுள்ளோரை குறி வைத்து அவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் எனக்கு தெரிந்தவை கொண்டு எழுதியுள்ளேன், நிச்சயமாக யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு என்றைக்கும்  இல்லை.

நன்றி
ரகு:)