Saturday, March 02, 2013

"விஸ்வரூபம்" - பல வழிகளில்


   படம் வெளிவந்து மூன்று கிழமைகள் ஆகிவிட்டது, நூற்றுக்கனக்கான விமர்சனங்களும் வந்துவிட்டது, இருப்பினும் இந்த படம் தொடர்பான எனது பார்வையையும் பதிவுசெய்வதற்காக இந்தப் பதிவு.


முன்னோட்டம்              
                   மதத்திற்கு எதிரான படம், எமது உணர்வுகளை புண்படுத்துகிறார் கமல் என்ற மறை விமர்சனங்களும், ஜெ அரசாங்கத்தின் கமல் மீதான காழ்ப்புணர்ச்சியும், என்னை அவம் பண்ணினால் ஊரைவிட்டே போய் விடுவேன் என்ற கமலின் தன்னிலை விளக்கமும் "விஸ்வரூபம்" படத்திற்கு கிட்டத்தட்ட இந்திய ரூபாய் 50 மில்லியன் அளவு விளம்பரத்தை கொடுத்திருந்தது.

இலங்கையில்!!
                   இலங்கையிலும் கிரிக்கட்டை தமிழில் (கொடுமை) வர்ணனை பண்ணும் பேர்வழிகளின் வால்பிடிப்பினால்  பட ரிலீஸ் திகதி தள்ளிப்போய், தமிழ் நாட்டில் பட ரிலீஸ் ஆனவுடன் திரைக்கு வந்தது, அப்பொழுது மதத்திற்கு எதிரான படம் இப்போது சார்பாகிவிட்டதா என்று கேட்கத் தோன்றுகிறது, தாம் காமடி பீசுகள் என்று தெரியாமல் ஒட்டிகொண்டிருக்கும் இந்த அரசியல் சாணக்கியர்களிடம்.



கதை
                    படத்தில் கமல் பெரிசாக ஒன்றும் சொல்லிவிடவில்லை ஆப்கானில் போய்  படமெடுக்காமல் இந்தியாவிலேயே செட் போட்டு எடுத்தது மட்டும் தான் புதியது தமிழ் ரசிகர்களுக்கு, சர்ச்சைக்குரிய திரைக்கதையை காப்டன் தொடக்கம் இளைய தளபதி வரை வகை தொகையின்றி வலது, இடது, மேலே, கீழே என்று பிரித்து ஏற்கனவே சொன்னபடியால் இத்தனை  ஓசி விளம்பரங்கள் இந்தப் படத்திற்கு கிடைத்தது பட்ஜெட் விமானத்தில் பறக்க விருபியவனை பிசினஸ் கிளாசில் ஏற்றி விட்டது போன்ற செயலுக்கு சமானமானது.

மதம் + வாதம்
            எந்த மதமும் தீவிரவாதத்தை போதிக்கவில்லை, அவ்வாறு போதிக்கிறது என்று சொல்லி தூண்டிவிடுபவர்கள் தான் உண்மையான மத விரோதிகள். ஒரு காட்சியில் போராளியின் மகன் நான் மருத்துவன் ஆகப் போகிறேன் என்பான், அதற்கு அவர் தந்தை இல்லை நீ என்னை போல போராளியகவேண்டுமென்று அந்த பாலகன் எண்ணத்தில் நச்சு விதையை விளைக்கிறான், இதுவல்லவோ மிகப் பெரும் தீவிரவாதம், அந்தச் சிறுவனைப்போல எத்தனை ஆயிரம் சிறார்கள் தம் கனவை காவுகொடுத்துவிட்டு ஆயுதம் ஏந்தி உயிர்களை தானம் செய்கிறார்கள். இந்தப் படத்தை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் அந்த நடைமுறைச் செய்கையை அல்லவோ முதலில் நிறுத்தியிருக்கவேண்டும் அல்லது முடிவுகட்ட போராடியிருக்கவேண்டும்.

             என்னை பொறுத்த வரையிலும் இந்த படம் ஒரு போராளிச் சமூகத்திலும் சாதாரண மனிதர்கள் போல அன்றாட வாழ்கையுண்டு அவர்கள் உடல்களும் இரத்தமும், சதையினாலும் ஆனது, மத அடையாளங்களை அவர்களது உடல்கள் தழுவியுள்ளதே தவிர அவர்களும் அடிப்படையில் சக மனிதர்கள் தானென்று வெளியுலகதிட்கு காட்டியதில் கமல் வெற்றியடைகிறார்.



கம(லு)ழும் திரைக்கதை      
       மற்றும்படி கமல் இயக்குனராகவும் ஒருபடி உயர்ந்திருக்கிறார், கதைத்தளம் அமெரிக்கா என்ற படியால் ஆங்கில மொழிப்பிரயோகம் தவிர்கமுடியாதுதான், ஆனால் அடுத்தடுத்த படங்களில் கமல் தனது கதையை விட எந்த தரப்பினருக்கு படமெடுக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆப்கான் காட்சிகள் தமிழுக்கு புதியது, பின்னணி இசை கதையின் வேகத்தோடு ஈடு கொடுப்பதாலும், நிறைய முடிச்சுகள் அவிழ்வதாலும், கிளைக்கதைகள் தொடர்புபடுத்தப்படுவதாலும் இரண்டாம் பாதி வேகமாக நகர்கிறது, எனினும் இரண்டாம் பாகதிட்க்கு முன்னோட்டமாக இருக்கட்டும் என்பதாலோ என்னமோ கிளைமாக்ஸ் காட்சி சப்'பென்று முடிந்ததாக தோன்றுகிறது.

          மொத்தத்தில் விஸ்வரூபம் கமலை நடிப்பிலும், இயக்கத்திலும் அதைவிட உணர்ச்சி மேலிட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்புகளிலும் விஸ்வரூபம் எடுக்கவைத்திருக்கிறது. முன்பாதி ஆச்சரியங்களுடனும், பின்பாதி வேகத்துடனும் எடுக்கப்பட்டிருக்கும் தங்கிலிஷ் படம், இரண்டாம் பாகத்திட்கான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டு ஆர்பாட்டமில்லாமல் முடிந்திருகிறது.


ஆறுமாத இடைவெளியின் பின்னரும், இந்த வருடத்தின் முதல் பதிவிடுவதட்கும் ஏதுவாயிருந்த இந்த படத்திற்கு நன்றி.

Photo Credit :- Google Search (Image).